இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல்
புதுதில்லி, பிப். 4- மக்கள் விரோத பட்ஜெட்டுக்கு எதிராக, வரும் பிப்ரவரி 12 முதல் 18 வரை, நாடு தழுவிய அளவில் கண்டன இயக்கங்கள் நடத்திட, இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(எம்எல்)லிபரேசன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மற்றும் புரட்சி சோசலிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகள் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது:
நாட்டு மக்களில் பெரும்பான்மை யோரை மேலும் கசக்கிப்பிழியக்கூடிய விதத்தில், வந்துள்ள பட்ஜெட்டுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் கிளர்ச்சி இயக்கங்கள் நடத்தப்படும். மோடி அரசாங்கம், இந்தியப் பொருளாதாரத்தை அழித்திருக்கிறது, மக்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சுமைகளை ஏற்றிக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில், பணக்காரர்களுக்கும், கார்ப்பரேட்டு களுக்கும் சலுகைகளுக்கு மேல் சலுகைகளாக வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. இவை, சுதந்திர இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் மத்தியில் பொருளாதார சமத்துவமின்மையை மேலும் விரிவாக்கிடும்.
இடதுசாரிக் கட்சிகள் நடைபெறவிருக்கும் கிளர்ச்சிப் போராட்டங்களில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை உயர்த்திப்பிடித்திடும்.
1. மக்களின் ஆயுட்கால சேமிப்பு மற்றும் பாதுகாப்பாகக் கருதப்பட்ட எல்ஐசி உட்பட பொதுத்துறை நிறுவனங்களைப் பெரிய அளவிற்குத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கைவிடு.
2. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ள வேலையின்மை மற்றும் தொழிற்சாலைகள் மூடல் அல்லது உற்பத்தி குறைப்பு ஆகியவற்றின் விளைவாக ஏற்பட்டுள்ள வேலைபறிப்பு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு; குறைந்தபட்ச ஊதியம் 21 ஆயிரம் ரூபாய் வழங்கிடு; போதுமான அளவிற்கு வேலையில்லா கால ஊதியம் அளித்திடு.
3. விவசாய நெருக்கடி ஆழமாகியிருப்பதற்கு எதிர்ப்பு; விவசாயிகளுக்கு ஒரு முறை அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்திடு.
4. முக்கியமான துறைகளில் அரசு செலவினங்கள் பெரிய அளவில் வெட்டப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு; (உணவு மானியம் 75,532 கோடி ரூபாய் வெட்டு), மீன்வளம் உட்பட வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களில் 30,683 கோடி ரூபாய் வெட்டு, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தில் 9,500 கோடி ரூபாய் வெட்டு, சமூக நலத் திட்டங்களில் 2,640 கோடி ரூபாய் வெட்டு, நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தில் 5,765 கோடி ரூபாய் வெட்டு, சுகாதாரத் துறையில் 1,169 கோடி ரூபாய் வெட்டு முதலானவை. இவை கோடிக்கணக்கான இந்தியர்களை வறுமைக் குழியில் தள்ளிவிடும். எனவே, இதற்கான தொகைகளை உயர்த்தாவிட்டாலும் கூட, பழைய அளவில் மீண்டும் அளித்திடு.
மோடி அரசாங்கமானது ஒரு பக்கத்தில் நம் அரசமைப்புச் சட்டத்தின் மீதும், குடியுரிமைத் திருத்தச் சட்டம்-தேசியக் குடிமக்கள் பதிவேடு-தேசிய மக்கள்தொகைப் பதிவேடு முதலானவற்றின் மூலமாக தன்னுடைய இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை அமல்படுத்தி, நாடு முழுதும் மக்களிடையே வெறுப்பு மற்றும் வன்முறையை வளர்த்திடக்கூடிய விதத்தில் தாக்குதலைத் தொடுத்திருக்கும் அதே சமயத்தில், மக்களின் வாழ்வாதாரங்கள் மீதும் கிரிமினல் தனமான தாக்குதல் தொடுத்திருக்கிறது. எனவே, ஒரு வாரம் நடைபெறும் கிளர்ச்சி இயக்கங்களில் அந்தந்த மாநிலங்களில் உள்ள துல்லியமான நிலைமைகளுக்கேற்ப கிளர்ச்சிப் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுக்கின்றன. (ந.நி.)